நாமக்கல்: தத்து எடுத்த பெற்றோருக்கு குழந்தையை வழங்கிய கலெக்டர்

நாமக்கல்லில், குழந்தைகள் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தையை தத்து பெற்றோருக்கு, கலெக்டர் வழங்கினார்

Update: 2022-01-29 01:30 GMT

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தையை, கலெக்டர் ஸ்ரேயாசிங் தத்து பெற்றோரிடம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில், சிறுவர் நீதி சட்ட விதிகளின்படி, ஆன்லைன் மூலம் பதிவு செய்து, காத்திருந்த தத்து பெற்றோர்களுக்கு, தத்து குழந்தையை கலெக்டர் ஸ்ரயோசிங் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ், சிறுவர் நீதிச்சட்ட விதிகளின்படி, திருச்செங்கோடு, பெருமாபாளையத்தில் பராமரிக்கும் குழந்தைகள் இல்லம் (சிறப்பு தத்து நிறுவனம்) செயல்பட்டு வருகின்றது. குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவோர்,  ஆன்லைன் மூலம் பதிவு செய்து, அரசு விதிமுறைகளின்படி, குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ளலாம்.

சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளைத் தத்தெடுத்தல் சட்டப்படி குற்றமாகும். சட்டத்திற்குப் புறம்பாகக் குழந்தைகளை வாங்குவதும், விற்பதும், அதற்கு துணையாக செயல்படுவதும் குற்றமாகும். அப்படி செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறினார்.

நிகழ்ச்சியில், குழந்தைகள் இல்ல நிர்வாகி பீட்டர் செல்வராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், பிஆர்ஓ சீனிவாசன், நன்னடத்தை அலுவலர் தேவகி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் கோகிலவாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News