ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.;

Update: 2025-03-31 10:20 GMT

நாமக்கல் நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் தொழுகையில் திரளான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல், 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதம் நிறைவில் முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகையை புத்தாடை அணிந்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு, நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் சார்பில், ரம்ஜானை முன்னிட்டு நாமக்கல் பேட்டை பள்ளிவாசலில் இருந்து, முத்தவல்லி தவுலத்கான் தலைமையில் திரளான முஸ்லீம்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர். அங்கு ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஜாமியா பள்ளி வாசல் இமாம் சாதிக்பாஷா, சிறப்புத் தொழுகையை நடத்தினார். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்தபின்பு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள்.

நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் சார்பில், அதன் துணைத் தலைவர் பாரூக் பாஷா, செயலாளர் நியாமத், துணைச் செயலாளர் சையத் நாசர், பொருளாளர் மகபூப் பாஷா, செயற்குழு உறுப்பினர்கள் முகமது அலி, மஹபூப் பாஷா, ஆலிம்ஷா, ஷேக் நிஜாம், அப்துல் ரஹ்மான், சிக்கந்தர் ஆகியோர் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதேபோல, நாமக்கல் கோட்டை, மாருதி நகர், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில், ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

Similar News