நாமக்கல்: கூட்டுறவு சொசைட்டி உறுப்பினராக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் உறுப்பினராக சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-07-15 13:26 GMT

இது குறித்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் உறுப்பினராக சேரலாம். விண்ணப்பபடிவத்தை, தாங்கள் குடியிருக்கும் பகுதியில் அல்லது தங்களது நிலம் இருக்கும் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு போட்டோ-2, ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் அல்லது ரேசன் கார்டு நகல் ஆகியவற்றுடன் பங்குத் தொகை ரூ.100 மற்றும் நுழைவுக்கட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் சங்கத்திற்கு நேரில் சென்று செலுத்தி உறுப்பினராகிக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத சூழ்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம்.

பதிவுத்தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பும்போது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் பங்குத்தொகை, நுழைவுக் கட்டணத்திற்கான தொகையினை போஸ்டல் ஆர்டர் மூலமாக செலுத்தி அதன் ரசீது எண், செலுத்தப்பட்ட தபால் அலுவலக பெயர், பெயர், முகவரி ஆகியவற்றையும் சேர்த்து, சங்கத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விவசாயிகளும், பொதுமக்களும் தாங்கள் சார்ந்துள்ள பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி, சங்கம் வழங்கும் அனைத்து சேவைகளையும் பெற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News