வேட்பாளர்கள் விளம்பரம் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு குழுவிடம் அனுமதி

வேட்பாளர்கள் விளம்பரம் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு குழுவிடம் அனுமதி பெறவேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2024-03-25 12:32 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

விளம்பரங்கள் வெளியிடுவதற்கு முன்பு, அரசியல் கட்சியினர், தேர்தல் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்திய தேர்தல் கமிஷன் கடந்த 16ம் தேதி, லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அன்று முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினர், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் சார்பில், சாட்டிலைட் டிவி, உள்ளூர் டிவி, ரேடியோ, எப்.எம். அலைவரிசைகளில் வெளியிடும் விளம்பரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விளம்பரங்கள் வெளியிடும் முன்பு ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் இருந்து அனுமதி சான்று பெற்ற பின்பே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

ஓட்டுப்பதிவுக்கு முன்தினமும் (ஏப். 18) மற்றும் ஓட்டுப்பதிவு (ஏப்.19) நாள் அன்றும் என, இரண்டு நாட்களுக்கும், அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, தனியார் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ செய்திப் பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பே, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். மேலும், செய்திப்பத்திரிகை நிறுவனங்களும், வாக்குப்பதிவு அன்றும், முன்தினமும் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் சான்று இருப்பதை உறுதி செய்த பின் விளம்பரங்கள் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News