தீபாவளி நேரத்திலும் வெல்லம் விலை சரிவு: கரும்பு விவசாயிகள் கவலை

தீபாவளி நேரத்திலும், பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை குறைந்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-10-18 02:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான மோகனூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாலப்பட்டி, நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் விளையும் கரும்புகளை வெல்ல ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, ஆலைகளில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்லச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஏலத்தில் வெல்லத்தை கொள்முதல் செய்வார்கள். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 3,000 சிப்பம் உருண்டை வெல்லம், 2,000 சிப்பம் அச்சு வெல்லம் வரத்து வந்தது. 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,320 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,350 வரையிலும் ஏலம் போனது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6,500 சிப்பம் உருண்டை வெல்லம், 3,500 சிப்பம் அச்சு வெல்லம் விற்பனைக்கு வந்தது. ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,220 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று 1,220 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால் வெல்லம் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News