நாமக்கல் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தேருக்கு விரைவில் இணைப்பு

Update: 2021-12-31 10:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தோருக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தில் சாதாரண வரிசை, சுயநிதித் திட்டம் ஆகிய அடிப்படையில் ரூ. 10 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் கட்டணம் செலுத்தும் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளோர் அதற்கான உரிய ஆவணங்களுடன் தயாராக இருக்கலாம். தமிழ்நாடு மின்வாரியம் புதிய விவசாயி மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சாதாரண வரிசையில் 1.4.2003 முதல் 31.3.2013 வரை மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 30 நாட்களுக்குள் அறிவிப்பு கடிதம் வழங்கப்படும். அவர்கள் உரிய ஆவணங்கள், தற்போதைய உரிமை சான்றிதழுடன் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், சுயநிதித் திட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் 1.4.2013 முதல் 31.3.2014 வரை ரூ. 500 முன்பணம் செலுத்தி பதிவு செய்துள்ள விவசாயிகளும் தற்போதைய உரிமை சான்றிதழுடன் தங்கள் பகுதி மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். பின்னர் மதிப்பீடு செய்து தயார் நிலை அறிவிப்பு கடிதம் வழங்கப்படும். ரூ. 25 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் கட்டண சுயநிதித் திட்டத்தில் 31.3.2018 வரை ரூ. 500 முன்பணம் செலுத்திய விண்ணப்பதாரர்களும் தங்களது உரிமை சான்றிதழ்களுடன் தயாராக இருக்கலாம். அவர்களுக்கும் விரைவில் அறிவிப்பு கடிதம் வழங்கப்படும்.

விரைவான முறையில் 2021-2022 ஆம் ஆண்டில் மின் இணைப்பு வழங்கும் தட்கல் திட்டத்தின் கீழ் முன்னதாகப் பதிவு செய்த விண்ணப்பத்திற்கோ அல்லது புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உரிமை சான்றிதழ் கொடுத்து உரிய தொகையை செலுத்தினால், விதிகளுக்கு உட்பட்ட மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News