நாமக்கல் நகராட்சியில் ஒரே நாளில் 22 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

நாமக்கல் நகராட்சியில், பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கி சுமார் ரூ.8 கோடி உள்ளது. இதைத்தொடர்ந்து வரி செலுத்தாத 22 குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

Update: 2022-03-20 00:45 GMT

பைல் படம்.

நாமக்கல் நகராட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி மற்றும் பாதாள சாக்கடை வரி என சுமார் 14 ஆயிரம் பேர் ரூ.8 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து நகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டும் பெரும்பாலானோர் வரி செலுத்த முன்வரவில்லை. மேலும் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே எச்சரித்து வந்தது.

இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்திநகர், முருகன் கோவில் பஸ் ஸ்டாப், காதிபோர்டு காலனி, கொண்டிசெட்டிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நகராட்சி இன்ஜினியர் சுகுமார் தலைமையில் மேலாளர் ஜெயகுருநாதன், துப்புரவு ஆய்வாளர் பழனிசாமி, வருவாய் ஆய்வாளர் பிரசாத் அடங்கிய குழுவினர் நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் இடங்களுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது வரி பாக்கி செலுத்த முன்வராதவர்களின் வீடு மற்றும் இடங்களில் இருந்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி, ஒரே நாளில் நாமக்கல் நகராட்சியில் பொக்லைன் இயந்திரம் மூலம் 22 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நீண்ட காலமாக வரி பாக்கியை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News