குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-01-26 12:45 GMT

பைல் படம்

நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் அறிவுறுத்தலின்படி, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால், அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன் அனுமதி பெற்று தொழில் நிறுவனம் செயல்படுகிறதா என்பது குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் பகுதியில், 28 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 16 கடைகளிலும், 48 ஹோட்டல்களை ஆய்வு செய்ததில் 26 ஹொட்டல்களிலும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 நிறுவனங்களிலும், என மொத்தம் 83 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 46 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க அனுமதி பெறாததும் கண்டறியப்பட்டது.

இதையொட்டி சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News