மயில்களைக் கட்டுப்படுத்த மூலிகைப் பூச்சி விரட்டி: விவசாயிகளுக்கு பயிற்சி

எருமப்பட்டி பகுதியில் மூலிகைப் பூச்சி விரட்டி மூலம், விவசாய தோட்டங்களில் மயில்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2023-06-13 02:30 GMT

எருமப்பட்டி பகுதியில், மூலிகைப்பூச்சி விரட்டி மூலம், விவசாய தோட்டங்களில் மயில்களைக் கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால், பல்வேறு இடங்களில், விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள பயிர்களைக் கடித்து சேதம் ஏற்படுத்துகிறது. மயில்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு மாதமும், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரம், மேட்டுப்பட்டி கிராமத்தில், விவசாய தோட்டங்களில் மயில்களால் சேதம் அடைவதை தடுப்பதற்கு நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய (கேவிகே) விஞ்ஞானிகள் மூலம், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மயில்களால் பல்வேறு வேளாண்மை பயிர்கள் சேதம் அடைவதை தடுப்பதற்கு ஹெர்போலிவ் பிளஸ் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி மயில்களைக் கட்டுப்படுத்துவது குறித்து, வயலில் செயல் விளக்கம் நடைபெற்றது. எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் டாக்டர் சங்கர் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.

ஹெர்போலிவ் பிளஸ் தெளிப்பதன் மூலம் மயில்கள், காட்டுப் பன்றிகள், மான்கள், முயல்கள், எலிகள், காட்டுப்பறவைகளை அண்ட விடாமல் பயிர்களை பாதுகாக்கலாம். மேலும் இந்த மருந்து பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகின்றது என்பதை விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. பின்னர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பூச்சியியல் வல்லுனர் விரிவாக விளக்கமளித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் முரளிதரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News