ரோட்டில் கார் கவிழ்ந்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் பலி: 4 பேர் காயம்

புதுச்சத்திரம் அருகே கார் கவிழ்ந்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-02-22 00:00 GMT

புதுச்சத்திரம் அருகே நடுரோட்டில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.

நாமக்கல் மாவட்டம், அக்கியம்பட்டி அருகே உள்ள கோனானூர் எல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன், லாரி அதிபர். இவருடைய மகன் மெய்யப்பன் (20). இவர் கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.இ. படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால், அந்த கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்லூரி திறப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடன் படிக்கும் நண்பர்களான நரேந்திரன் (20), கவுதம் (19), கோபி (20), சுனில்நாத் (20) ஆகியோர் மெய்யப்பனைப் பார்க்க கோனானூர் வந்தனர்.

பின்னர் 5 பேரும், புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியைச் சேர்ந்த நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்றனர். காரை மெய்யப்பன் ஓட்டிச் சென்றார். நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், களங்காணி பஸ் ஸ்டாப் அருகே அந்த கார் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி, சாலைத்தடுப்பில் மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மெய்யப்பன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் மெய்யப்பன் உயிரிழந்தார். மற்றும் 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News