விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்: நாமக்கல், திருச்செங்கோடு டிஇஓ மாறுதல்
விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நாமக்கல், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாறுதலாகி உள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களை போல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதையொட்டி, இடமாறுதல் கவுன்சலிங் நடைபெற்றது. அதில், மாவட்ட கல்வி அலுவலர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கோ அல்லது சொந்த ஊர் உள்ள மாவட்டங்களுக்கோ செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள, 110 மாவட்ட கல்வி அலுவலர்கள், முன்னுரிமை அடிப்படையில், இடங்களை தேர்வு செய்து, இடமாறுதல் பெற்றனர். நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பாலசுப்ரமணியம், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலராக ரவி ஆகியோர் பணியாற்றினர்.
இடமாறுதல் கவுன்சிலிங்கில், பாலசுப்ரமணியம், சங்ககிரிக்கும், ரவி, தர்மபுரி மாவட்டம், அரூருக்கும் இடமாறுதல் பெற்றனர். அதேபோல், நாமக்கலுக்கு, பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் ராமனும், திருச்செங்கோடுக்கு, இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயாவும் இடமாறுதல் பெற்றுள்ளனர்.