9ம் தேதி மண்டல அளவில் கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல்லில் வரும் 9ம் தேதி மண்டல அளவிலான கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.;
பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக முதல்வர் உத்தரவின்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் வகையில், 2 மாதங்களுக்கு ஒரு முறை, மண்டல அளவில், பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரைப்படி, 2 மாதங்களுக்கு ஒரு முறை, 2 ஆவது வெள்ளிக்கிழமை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும் வகையில், பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 6வது கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி, வரும் மே 9ம் தேதி, நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில், காலை 10:30 மணிக்கு நடக்கிறது. கூட்டுறவு நிறுவன பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின்போதே ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்பட்டு, 2 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும். நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நிலை பணியாளர்களும், தங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால், பணியாளர் நாள் கூட்டத்தில் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.