கோழிப்பண்ணையில் தொடர்ந்து நஷ்டம்: வங்கி கடன் தவணையை தள்ளிவைக்க கோரிக்கை

கோழிப்பண்ணைத் தொழிலில் பெரும் இழப்பால் பண்ணைகளுக்கு வங்கிக்கடன் தவணையை 6 மாதம் தள்ளி வைக்க பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-03-20 02:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில், அதன் தலைவர் சிங்கராஜ் பேசினார். அருகில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ்.

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கச் செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்.பி.யும், முன்னாள் சங்கத் தலைவருமான சின்ராஜ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

சங்க தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டாக, முட்டை விலை சரிவால், கோழிப்பண்ணைத் தொழில் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஒரு முட்டை ரூ.5 விலைக்கு விற்றால் மட்டுமே, நஷ்டத்தில் இருந்து மீள முடியும். அதனால் 80 வாரங்களைக் கடந்த, வயதான கோழிகளை, உடனடியாக விற்பனை செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால், வயது முதிர்ந்த கோழிகளால் முட்டை உற்பத்தி பாதிப்பு, தீவனங்கள் பயன்பாடு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போரால், அங்கிருந்து தீவன மூலப்பொருட்கள் வராததும், கிடங்குகளில் வியாபாரிகள் அதிக அளவில் பதுக்கி வைத்துள்ளதாலும், விலை அதிகரித்துள்ளது. தீவன உற்பத்தி செலவு உயர்வால் பண்ணையாளர்களுக்கு மேலும் அதிக நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளித்தால், ஒரு லட்சம் கோழிகளுக்கு ரூ. 20 லட்சம் வரை பண்ணையாளர்களுக்கு செலவு குறையும். இதன் மூலம் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

கோழிப்பண்ணைத்தொழில் சீராகும் வரை, வங்கி நிர்வாகத்தினர் பண்ணையாளர்களிடம் கடன் தொகை வசூல் செய்வதை குறைந்தபடசம் 6 மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும். தற்போது, தமிழகத்தில் கோழிப்பண்ணைத் தொழிலில் நாள்தோறும் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் கோழிப் பண்ணை தொழில் நலிவடையாமல் காப்பாற்ற தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். திரளான கோழிப்பண்ணையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News