வரும் 26ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 20,032 மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் வரும் 26ம் தேதி, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 20,032 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

Update: 2024-03-14 01:15 GMT

பைல் படம்

தமிழகத்தில் வரும் 26ம் தேதி, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 20,032 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, வரும் 26ம் தேதி துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 92 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10 ஆயிரத்து 335 மாணவர்கள், 9,697 மாணவியர் என, மொத்தம் 20 ஆயிரத்து 32 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பொது தேர்வுக்காக, 92 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு பணியில், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 3 பேர், கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 6 பேர், வழித்தட அலுவலர்கள் 24 பேர், முதன்மை கண்காணிப்பாளர்கள் 92 பேர்.

துறை அலுவலர்கள் 92 பேர், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர் ஒருவர், கூடுதல் துறை அலுவலர் ஒருவர், அறை கண்காணிப்பாளர்கள் 1,395 பேர், பறக்கும் படை உறுப்பினர்கள் 288 பேர், எழுத்தர்கள் 92 பேர், சொல்வதை எழுதுபவர்கள் 328 பேர், என மொத்தம் 2,322 பேர் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்களுக்கான முன் ஆயத்தக்கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

வருகிற 26ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. எந்தவிதமாக புகாருக்கும் இடம் அளிக்காமல், சிறப்பாக தேர்வை நடத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் வாட்ச் போன்ற உபகரணங்களை பயன்படுத்தக்கூடாது. மாணவர்கள் தேர்வை அமைதியான முறையில் எழுத தகுந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என அவர் கூறினார். மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் சிவகாமி, பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, டி.இ.ஓவின் நேர்முக உதவியாளர் கலையரசன், கண்காணிப்பாளர் விக்டர்பால் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News