நாளை தமிழக முதல்வருடன் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்துரையாடல்: இணைய வழியில் கலந்து கொள்ளலாம்

இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் நாளை கலந்துரையாடல் -எம்.பி ராஜேஸ்குமார் தகவல்

Update: 2022-04-15 09:00 GMT

ராஜேஷ்குமார். எம்.பி

புதிய இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன், வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதல்வர் இன்று 16ம் தேதி கலந்துரையாடுகிறார் என எம்.பி ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் ராஜ்யசபா எம்.பியுமான நாமக்கல் ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தமிழகம் முழுவதும் விவசாயத்திற்காக 1 லட்சம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அறிவித்தார். தமிழக முதல்வரின்உத்தரவின்படி 6 மாத காலத்தில் மின்சார வாரியத்தின், ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 2,670 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை  16ம் தேதி காலை 10.30 மணியளவில் கலந்துரையாடுகிறார்.

புதிய விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், சேந்தமங்கலம் பகுதிக்குட்பட்ட பயனாளிகள் நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள கோஸ்டல் ஹோட்டலிலும், ராசிபுரம் பகுதிக்குட்பட்ட பயனாளிகள் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருச்செங்கோடு பகுதிக்குட்பட்ட பயனாளிகள் திருச்செங்கோடு விவேகானந்தா இன்ஜினியரிங் கல்லூரியிலும், பரமத்தி வேலூர் பகுதிக்குட்பட்ட பயனாளிகள் பரமத்தி எம்.எஸ் மணியம் பள்ளி அருகிலுள்ள லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்திலும், மோகனூர் பகுதிக்குட்பட்ட பயனாளிகள் சுப்பிரமணியம் கலை கல்லூரியிலும், குமாரபாளையம் பகுதிக்குட்பட்ட பயனாளிகள் எக்செல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு முதல்வருடன் ஆன்லைன் மூலம் பேசலாம். எனவே புதிய விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் நடக்கும் தமிழக முதல்வரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேண்டும் என நாமக்கல் எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News