இன்று 3வது ஞாயிறு முழு ஊரடங்கு: நாமக்கல் மாவட்டத்தில் ரோடுகள் வெறிச்...

இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா முழு ஊரடங்கால், நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் அனைத்தும் வெறிச்சோடியது.

Update: 2022-01-23 02:15 GMT

கொரோனா முழு ஊரடங்கால் நாமக்கல் நகரில் உள்ள முக்கிய ரோடுகள் அனைத்தும், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 3வது ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், சனிக்கிழமை நள்ளிரவு முதல் பஸ்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை நேரத்தில் மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பரபரப்பாக வாங்கிச்சென்றனர்.

இன்று ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகள், உழவர் சந்தை, காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அனைத்து மெயின் ரோடுகளும், தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், பால் விற்பனை நிலையங்கள், பத்திரிக்கை விநியோகம், ஓட்டல்கள் முதலிய அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்பட்டன. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும். 

Tags:    

Similar News