கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த 106 குழந்தைகள் : நாமக்கல் கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பால் 106 குழந்தைகள், பெற்றோர்களை இழந்ததாக, கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-07-10 05:26 GMT

தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின், மாவட்ட அளவிலான மறுசீராய்வுக் கூட்டம் , நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்நடைபெற்றது. மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகைசெல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமை வகித்து, கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கும், குழந்தை திருமணத்தை தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 2020-2021-ஆம் கல்வியாண்டில், 170 தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1,478 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள சைல்டு லைன், இலவச தொலைபேசி எண் 1098 -க்கு ஜனவரி 2021 முதல் தற்போது வரை வரப்பெற்ற 334 புகார்களில் 22 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. 139 குழந்தைகள், குழந்தைகள் நல குழுமம் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1,599 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மூலம் 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள 30,370 குழந்தைகளுக்கும், 3 வயது முதல் 5 வயது வரை உள்ள 20,242 குழந்தைகளுக்கும், 8,639 கர்ப்பிணித்தாய்மார்களுக்கும், 6,788 பாலூட்டும் தாய்மார்களுக்கும், 2 முதல் 5 வயது வரை உள்ள 30,042 மதிய உணவு பெறும் குழந்தைகளுக்கும் இணை உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 313 பிறந்த குழந்தைகள் உட்பட 2,462 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கென 95 சிறப்பு ஆக்சிஜன் படுக்கைகளும், 20 சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் 105 குழந்தைகள் ஒற்றைப் பெற்றோரையும், 1 குழந்தை தாய், தந்தை என இருவரையும் இழந்துள்ளனர். இக்குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ஸ்ரீவித்யா, டிஆர்ஓ துர்காமூர்த்தி, டிஆர்டிஓ திட்ட இயக்குநர் வடிவேல், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சித்ரா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News