நாகையில் படகில் கடத்த முயன்ற கஞ்சா,வாகனங்களுடன் பறிமுதல்
நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கஞ்சா மூட்டைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத் துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நாகை துறைமுகம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது நாகை துறைமுகம் அருகே ஒரு படகில் கஞ்சா மூட்டைகள் ஏற்றிக்கொண்டு இருந்ததை கண்டு அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் கஞ்சாவை படகுடன் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து படகைச் சுற்றி வளைத்து சுங்க அதிகாரிகள் படகில் 10 மூட்டைகளில் இருந்த 280 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 4, இருசக்கர வாகனம் இரண்டு வலைகள் ஒரு ஐஸ் பெட்டி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தப்படவிருந்த கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்றும் இந்த கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும் இலங்கைக்கு படகு மூலம் கடத்தவிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .