நாகப்பட்டினம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விடிய விடிய அதிரடி சோதனை
லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று சார்பதிவாளர் பாபு உள்பட அனைத்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாகவும், விதிகளுக்கு புறம்பாக பத்திரப்பதிவு செய்ப்படுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலக வருவாய் தொடர்பான கணக்குகளை கண்காணிக்கத் தொடங்கினர்.
சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மற்றும் சென்னையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்
இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக பாபு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் லஞ்ச முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் காவல்துறையினர் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் சார்பதிவாளர் பாபு உள்பட அனைத்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 3 மணி வரை நடந்தது. தொடர்ந்து 9 மணி நேரம் விடிய விடிய நடந்த இந்த அதிரடி சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 800 ரொக்க பணத்தை கைப்பற்றினர். மேலும் சில ஆவணங்களையும் கைப்பற்றி சென்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.