நாகை மாவட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல்
நாகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல் நடத்தியது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தி.மு.க.வினர் வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் நாகை, வேதாரண்யம் ஆகிய இரண்டு நகராட்சிகள் மற்றும் திட்டச்சேரி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய 4 பேரூராட்சிகளில் போட்டியிட தி.மு.க.வினர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர்.
விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நாகை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க. நாகை மாவட்ட பொறுப்பாளர் கெளதமன் மேற்கொண்ட நேர்காணலில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூர் மன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 214 பேர் பங்கேற்றனர்.