ஒ.பி.எஸ். தலைமையில் அதிமுக எழுச்சியுடன் செயல்படும்: முன்னாள் எம்.பி கருத்து
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் - ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.;
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன்.
ஓபிஎஸ் யின் தலைமையில் அதிமுக கட்சி எழுச்சியுடன் செயல்படும் என்றார் மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் எம்பியுமான கோபாலகிருஷ்ணன்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பதவி செல்லாது என்றும் முன்பிருந்த ஒருங்கிணைப்பாளர் இணை, ஒருங்கிணைப்பாளர் நடைமுறையே தொடரும் என தெரிவித்தார்.
இதனை த்தொடர்ந்து, இன்று ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான , மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில், மதுரை மாவட்ட நீதிமன்ற அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ,பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும் புரட்சித்தலைவர், தலைவியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் .அண்ணா திமுக என்பது தொண்டர்களுக்கான இயக்கம் என்பதை இந்த தீர்ப்பின் மூலம் நீதியரசர் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.
நீதியரசர் பெயரிலேயே எங்கள் கழகத்தின் தலைவர்களின் பெயரும் உள்ளது, ஆகவே, இந்தத் தீர்ப்பை புரட்சித்தலைவியின் ஆன்மாவும், புரட்சித்தலைவருடைய ஆன்மாவும் இணைந்து கொடுத்த வழிகாட்டுதலாகவே நாங்கள் பார்க்கிறோம்.காலம் என்பது அனைத்தையும் மாற்றும், மாற்றம் ஒன்றே மாறாதது, காலம் என்பது எல்லாவற்றையும் சரிப்படுத்தும், காலம் என்பது எல்லாவற்றையும் வழி நடத்தும்
இந்த தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றியானது அதிமுகவின் ஒன்றைக் கோடி தொண்டனின் வெற்றியாக தான் பார்க்க வேண்டும். மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வெற்றியானது தொண்டர்களின் வெற்றியாக நினைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடி வருகிறோம் என்றார் கோபாலகிருஷ்ணன்.