கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும், சட்டம் & ஒழுங்கை பராமரிக்கும் வகையில் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், ரவுடித்தனம் செய்யும் நபர்களை கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி., சாய்சரண் தேஜஸ்வி தலைமையில், மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலைய எல்லைகளில் உள்ள குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் நேற்று இரவு முதல் தேடப்பட்டனர்.
இதில், வழக்குகளில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தவர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள், ரவுடிகள் என மொத்தம் 80 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதே போல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் அனைத்து ரவுடிகளையும் கைது செய்ய, மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் தலைமறைவாக உள்ள ரவுடிகளை தேடி வருகின்றனர்.