குமரியில் கனமழையால் 200 ஏக்கர் நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்பு

குமரியில் பெய்து வரும் கனமழையால், 200 ஏக்கர் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-17 14:45 GMT

தாழக்குடி பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்துள்ள நெற்பயிர்கள்.  

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 42 மணி நேரமாக பெய்து வரும் கனமழையால்  மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.  அணைகளில் இருந்து 28 ஆயிரம் கன அடி நீர் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கோதையாறு தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகி குமரி மேற்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில்,   அணைகளில் இருந்து பெருமளவில் நீர் திறக்கப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனிடையே தாழக்குடி பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழக்குடி, இறச்சகுளம், புத்தேரி தெரிசனங்கோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டிருந்த நெல் விவசாய நிலத்தில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது.

இதன் காரணமாக நெல் பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கியுள்ள நிலையில், மழை நீர் வடியாததால் நெல் பயிர்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.  கஷ்டப்பட்டு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் அழியும் நிலைக்கு செல்வதை கண்டு அப்பகுதி விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News