குமரியில் முதன்முறையாக நடந்த மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி

குமரியில் முதன் முறையாக நடைபெற்ற மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தியில் ஆதீனங்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Update: 2021-09-20 15:00 GMT

புனித நதியான கங்கா நதி கரையில் நடைபெறும் சர்வ மங்கள ஆரத்தி நிகழ்ச்சியை போன்று,  சர்வதேச புகழ்பெற்ற முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில்,  பல்வேறு இந்து இயக்கங்கள் மற்றும் ஆன்மீக இயக்கங்கள் சார்பில் மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜை நடைபெற்றது. முன்னதாக வேத விற்பன்னர்களின் வேத மந்திரம் மற்றும் திருக்கயிலாய பஞ்ச வாத்தியம் முழங்க சமுத்திர பூஜை, பவுர்ணமி சங்கல்ப பூஜை, சப்தகன்னியர் வழிபாடு என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, சமுத்திரத்திற்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், வெள்ளிமலை ஆசிரம மடாதிபதி உள்ளிட்ட ஆதீனங்கள், மற்றும் முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில  அமைப்பு செயலாளருமான பச்சைமால், மற்றும் இந்து இயக்க தலைவர்கள், நிர்வாகிகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த இந்து இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களை கடற்கரை பகுதிக்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்து இயக்க தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர், கடற்கரை பகுதிக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர், இந்த நிகழ்ச்சியானது பவுர்ணமி, அமாவாசை மற்றும் விஷேச நாட்களில் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News