கன்னியாகுமரி மூளைச்சாவு அடைந்த சமூக சேவகரின் 7 உடல் உறுப்புகள் தானம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த சமூக சேவகரின் 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2023-11-26 14:33 GMT

7 உடல் உறுப்புகள் தானம் செய்த சமூக சேவகரின் உடலுக்கு கன்னியாகுமரி சப் கலெக்டர் அரசு சார்பில் மரியாதை செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடைகீழ்குளம் அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவர் மருத்துவம் சார்ந்த முது நிலைபட்டப்படிப்பு படித்துள்ளார். கருங்கல், புத்தன் துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு. செல்வின் சேகர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அத்துடன் ஆதரவற்று சுற்றித்திரியும் பெரியோர்களுக்கு உணவுகள் அளித்தும்,காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு மாத செலவு கட்டணமும் வழங்கியும் வந்துள்ளார். அத்துடன் ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.

இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவுஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனாலும் அவரது உடல் நிலை மோசமானது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது அவரது மூளையில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் உடல் நிலை மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றார்.  மூளைச்சாவு அடைந்த செல்வின் உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்த பின்பு தனது உடல் "உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என மனைவியிடம் கூறியிருந்தார். அதன்படி உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறினர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.அவரது இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இதயத்தை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மீதமுள்ள 6 உறுப்புகளும் 6 பேருக்கு மறுவாழ்வுஅளிக்கும் வகையில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊரான சரல்விளை பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம்-கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டில்  உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஆசாரிபள்ளம் மருத்துவமனை டீன் பிரின்ஸ்பயஸ் மற்றும் தாசில்தார்கள், கிராம நிர்வாகிகள் உள்பட 5 அரசு அதிகாரிகள் பலரும் நேரில் சென்று உட லுக்கு அரசு மரியாதை செலுத்தினர்.மேலும் செல்வின் சேகர் உடலுக்கு உறவினர்கள், ஊர்மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News