கொள்முதல் மையங்களில் பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை என எச்சரிக்கை

கொள்முதல் மையங்களில் பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-03-29 15:11 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி (பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த பருவமழை மற்றும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் 95 சதவீதத்துக்கு மேல் நிரம்பி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

ஏரிகளில் நீர் மற்றும் நீர் ஆதாரங்கள் கிணற்றில் அதிகரித்ததால் விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி 69,820 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) சார்பாக 103 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) சார்பாக 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஆக மொத்தம் 123 நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இதில் காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து தாலுகாவில் உத்திரமேரூர் தாலுகாவில் மட்டும் 88 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தெரிந்து வைத்து கொள்முதலை துவக்கி வைத்தனர். தற்போது வரை 4027.240 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்று இடைத்தரகர்கள் தலையிடுவது தெரியவந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ரூபாய் 40 முதல் 60 ரூபாய் வரை வசூல் செய்வதாகவும், இதனை தர மறுக்கும் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்வது காலதாமதம் ஆகுவது என பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News