650 வது நாள் : ஏகனாபுரத்தில் பட்டை நாமம் போட்டு போராட்டம்.

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிராக கடந்த 650 நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-05 14:30 GMT

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 650 ஆவது நாள் போராட்டத்தில் பட்டை நாமம் போட்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி 4, 800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்து அதற்கான பணிகளை துவக்கி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்திற்கு ஆரம்ப நாள் முதலே ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாள்தோறும் மாலை வேலைகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் இன்று 650 ஆவது நாளை ஓட்டி கிராமத்தில் உள்ள அம்மன் திருக்கோயில் அருகே பட்டை நாமம் போட்டுக் கொண்டு மத்திய மாநில அரசுகளின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்திட்டத்தை கைவிடக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்த நிலையில் தேர்தல் விதிமுறையில் இருந்ததால் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது போராட்டங்கள் மீண்டும் நாள்தோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் , வருவாய்த்துறை தங்கள் கிராம உரிமையாளர்கள் பெயர்களை தவறாக பதிந்து வருவதாகவும் இதற்கு ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் துணை போவதாகவும் , இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுத்தி பயனடையலாம் என எண்ணும் அரசு அதிகாரிகளின் போக்கு ஒரு போதும் இந்த  கிராமத்தில் எடுபடாது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News