புதிய விமான நிலையத்தால் கிராமமே அழியும்- காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைந்தால் கிராமமே அழியும் என பாதிக்கப்படும் மக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-08-08 11:30 GMT

பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் ஏகனாபுரம் முற்றிலும் பாதிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராம மக்கள் ஆட்சியரை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கவிருப்பதாக மத்திய,மாநில அரசுகள் அறிவித்துள்ளன.விமான நிலையம் அமைந்தால் 12 கிராமங்கள் பாதிக்கப்படும்.இதில் ஏகனாபுரத்தில் மட்டும் 600 குடியிருப்புகளில் வசிக்கும் 2500 மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஏகனாபுரத்தில் உள்ள ஏரி,குளம்,கால்வாய்,நன்செய் நிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.எங்கள் கிராமத்து மக்களுக்கு விவசாயமே பிரதானத் தொழில் இதைத்தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது.

எங்களுக்கு சொந்தமான நிலங்களை நாங்கள் உரிய இழப்பீடு பெற்றுக்கொண்டு இழக்கத் தயாராக இருக்கிறோம்.ஆனால் குடியிருப்புகளை இழக்க நாங்கள் தயாரில்லை. எனவே விமான நிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில் எங்கள் கிராமத்து மக்களை காப்பாற்றுமாறு அக்கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கூறுகையில் விமான நிலையம் அமைப்பதாக அறிவிப்பு தான் வந்திருக்கிறது. அவ்வாறு அமைக்கப்படும் போது மாவட்ட நிர்வாகத்திடம் பாதிப்புகள் எதுவும் உள்ளதா என்று அரசு கேட்கும்.அப்போது நாங்கள் உங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்போம்.அங்கீகரிக்கப்படாத வரைபடம் மட்டுமே தற்போது வெளியாகி இருக்கிறது.மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு விமான நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.


Tags:    

Similar News