நாளை வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்வசம்: பாதுகாப்பு பணியில் போலீசார்

ஸ்ரீ தேவராஜசாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் நாளை அதிகாலை 5 மணி அளவில் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.

Update: 2022-05-18 13:30 GMT

அலங்கரிக்கப்பட்டுள்ள திருத்தேர். 

உலகப் புகழ்பெற்ற அத்திவரதர் கோயிலான ஸ்ரீ வரதராஜ பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீ தேவராஜ பெருமாள் சுவாமி திருக்கோயில்,  வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தில்,  காலை - மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ பெருமாள் எழுந்தருளி,  காஞ்சிபுரம் நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அவ்வகையில் ஞாயிற்றுக்கிழமை கருட சேவை நிகழ்ச்சி வெகு கோலாகலமாக பக்தர்கள் படைசூழ எம்பெருமான் நகரில் வீதி உலா வந்தார்.

ஏழாம் நாள் திருவிழா, திருத்தேர் உற்சவம் நாளை அதிகாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. முன்னதாக ஸ்ரீ வரதர் திருக்கோயிலில் இருந்து தேரடி வீதியில் இருக்கும் திருத்தேரில், எழுந்தருளி பக்தர்களுக்கு சிறிது நேரம் அருள் பாலித்த பின் காலை 6 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெறும்.

நகரின் முக்கிய வீதிகளான காந்தி ரோடு,  காமராஜர் வீதி இரட்டை மண்டபம் மற்றும் நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேரடி வீதியில் திருத்தேர் நிறுத்தப்படும். இத்திருத்தேர் நிகழ்வு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 750 காவலர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்களை, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News