திருக்கோயில் வருமானம் திருக்கோயிலுக்கே அரசுக்கு அல்ல : விஷ்வ இந்து பரிஷத் தலைவர்

கோயில்களிலிருந்து வரும் வருமானத்தை அரசு நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தக்கூடாது

Update: 2022-06-25 14:30 GMT

காஞ்சிபுரம் அடுத்த பொடாவூர் கிராமத்தில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் மாநாட்டில் தேசிய தலைவர் அலோக் குமார்

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில இந்திய அளவிலான நிர்வாகக்குழுக் கூட்டம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இம்மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 27 -ஆம் தேதி திங்கள்கிழமை வரை 5 நாட்களுக்கு நடந்து வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற அமைப்பின் அகில இந்திய செயல் தலைவர் அலோக்குமார் கூறியது:  தெலங்கானா, ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் அருகே கண்டிவாக்கம் ஆகிய இடங்களில் சுவாமி சிலைகள் உடைக்கப் பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் சுவாமி சிலைகள் இடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஒரு நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது.அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் குடிபோதையில் செய்திருக்கிறார் என்றும் காவல்துறை சொல்வதை நம்ப முடியவில்லை. இதில்சம்பந்தப்பட்ட உண்மையான நபரை கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கும் மற்ற இடங்களில் சிலைகளை உடைத்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுத இருக்கிறோம்.

அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோயில்களை விடுவித்து அவற்றை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக கோயில்களிலிருந்து வரும் வருமானத்தை அரசு தனது நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தக்கூடாது.இந்துக் கோயில்களை ஒரு சில மாநில அரசுகள் தொடர்ந்து நிர்வகித்து வருவது வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தின் தொடர்ச்சியாகவே அமைப்பு கருதுகிறது. இந்துக்கோயில்களிலிருந்து வரக்கூடிய வருமானம் கோயில்களின் பராமரிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அலோக்குமார் தெரிவித்தார்.

பேட்டியின் போது அமைப்பின் தேசிய ஊடக தொடர்பாளர் விஜய் சங்கர் திவாரி, வடதமிழக தலைவர் சு.சீனிவாசன், வட தமிழக ஊடகப்பிரிவு தலைவர் கார்த்திகேயன் ஆகியோரும் உடன் இருந்தனர். இக்கூட்டத்தில் நேபாளம், தாய்லாந்து, இலங்கை மற்றும் ஜம்முகாஷ்மீர், ராஜஸ்தான், அஸ்ஸாம் உட்பட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் அமைப்பின் நிர்வாகிகள் 422 பேர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News