ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா; தமிழக ஆளுநர் பங்கேற்பு

வரும் 26 ஆம் தேதி நடைபெறும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

Update: 2021-07-21 14:45 GMT

ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள்( பைல் படம்).

காஞ்சி காமகோடி பீடத்தின் 69 வது பீடாதிபதியாக இருந்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள். இவரது ஜெயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஜெயந்தி விழா, இம்மாதம் 26 ஆம் தேதி திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர்  சுந்தரேச ஐயர்  கூறுகையில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் சங்கர மடத்திலும், காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சதாப்தி மணிமண்டபத்திலும் காலையில் ஏகாதசருத்ர ஜெபம், வேத பாராயணம், நாமசங்கீர்த்தனம்,விசேஷ ஹோமங்களும்,வேத பண்டிதர்கள் கலந்துரையாடலும் நடைபெறுகிறது.

இதனையடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. மாலையில் ஓரிக்கை மகா பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாதுகைக்கு தங்க நாணயங்களால் விஜயேந்திரர் பாதபூஜை செய்கிறார்.

பின்னர் ஆந்திரப்பிரதேச முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் என்.பி.வெங்கடேச சௌத்ரி எழுதிய வியட்நாம் மற்றும் கம்போடியா தேசங்களில் இந்து கோயில்கள் என்ற தெலுங்கு நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிடுகிறார்.

இவ்விழாவில் இலவச தையல் இயந்திரங்கள், இட்லிப் பாத்திரம் மற்றும் சலவைப் பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் சங்கரமடத்தின் சார்பில் ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக விஜயேந்திரரும், தமிழக ஆளுநரும் சிறப்புரையாற்றுகின்றனர்.

Tags:    

Similar News