திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவிற்கு திருமாலைகள்

திருவண்ணாமலை யில் நாளை நடைபெறவுள்ள கார்த்திகை திருவிழாவுக்கு அருணாச்சலஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு மலர் மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-12-05 14:15 GMT

திருவண்ணாமலை தீப கார்த்திகை விழாவில் அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சாற்றப்படவுள்ள திரு மாலைகள் காஞ்சிபுரத்திலிருந்து  அனுப்பி வைக்கப்பட்டது 

நாளை நடைபெறவுள்ள திருவண்ணாமலை கார்த்திகை திருவிழாவுக்கு அருணாச்சலஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சாற்றவுள்ள சிறப்பு மலர் மாலைகள் பூஜைகள் நிறைவுக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டது.

அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பத்து நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். நாள்தோறும் அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருவர்.

மேலும் விநாயகர் முருகர் ஆகியோர் திருத்தேர்தலில் வலம் வரும் நிகழ்ச்சியும், 63 நாயன்மார்கள் உலா வரும் நிகழ்ச்சியும்  நிறைவு பெற்றது.

நாளை நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில், லட்சக்கணக்கான மக்கள் கூடி மாலை நடைபெறும் தீபத் திருவிழாவை காண உள்ளனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல்லாயிரம் கணக்கான காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் கடந்த நான்கு தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை மாலை சிறப்பு அலங்காரத்தில் அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் கொடிமரம் அருகே எழுந்தருள, மலை  மீது உள்ள கொப்பரையில் சிறப்பு மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வை காண சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலிருந்து பக்தர்கள் காத்திருப்பர்.


காலையிலிருந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி இதன் பின் தங்கள் வீடுகளில் குடும்பத்துடன் பூஜைகள் மேற்கொண்டு அதன் பின் உணவருந்துவர்.

வருடந்தோறும் காஞ்சிபுரம் காந்தி ரோடு ஜவுளி வியாபாரிகள் சத்திர தர்ம பரிபாலனை மகமை சங்கம் சார்பில் திருநாளன்று அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு உள்ள மலர் மாலைகள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும்.

காஞ்சிபுரம் பிரபல பூ அலங்கார நிபுணர் நாகேஷ் 35 பேர் கொண்ட குழுவினர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல வண்ண மலர்களைக் கொண்டு பூமாலை கொடுத்தனர்.

7 அடி நீளம் கொண்ட மரக்கா அளவு கொண்ட மாலைகள் தொடுக்கப்பட்டு இன்று அதனை காந்தி ரோடு ஜவுளிக்கடை சத்திரத்தில் பொதுமக்கள் பார்வைக்காக, பூஜையில்  வைக்கப்பட்டது.

மாலை ஆறு மணி அளவில் சங்க தலைவர் வி.கே.முத்துக் காளத்தி மற்றும் மாணிக்கவேலு ஆகியோர் திரு விளக்கேற்றி ஏற்றி , தீப ஆராதனைகள் மற்றும் பூஜைகளை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கார்த்திகை திரு மாலைகளை கண்டும் வணங்கியும் தரிசித்தனர்.

இரவு சிறப்பு பெட்டகத்தில் அனைத்து மாலைகளும் திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான திருமாலைகள் தொடுக்கும் நிலையில் அதில் ஈடுபடும் ஊழியர்களும் விரதம் இருந்து இப்பணியில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலைக்கு செல்ல இயலாத மூத்த குடிமக்கள் இத்திருமாலையினை காண இங்கு வந்து தரிசனம் செய்வர்.

Tags:    

Similar News