காஞ்சிபுரத்தில் இது பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு பற்றிய தகவல்களை பொதுமக்கள் தந்தால் வெகுமதி அளிக்கப்படும் என்று கலெக்ர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-26 03:30 GMT

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடைஅறிவிப்பை, தமிழகஅரசு, 25.06.2018 நாளிட்ட அரசாணை எண் 84 ல் வெளியிட்டது.

இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத்தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப்பொருட்களை கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள்/பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக்கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்துவைப்பதும்,  விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்குமண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

இத்தடை ஆணையை செயல்படுத்த, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அவற்றுள், மாவட்ட சுற்றுச்சூழல் குழுக்கூட்டங்கள், மாவட்டந்தோறும் பெருந்திரள் விழிப்புணர்வு பேரணிகள், சமூக ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு, தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்பு பதாகைகள் நிறுவுதல் போன்றவை மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து மூடுதல் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இருப்பினும் குடியிருப்பு/வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள், எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.

எனவே சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புகார்களை தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம். அவர்களுடைய தொடர்பு விவரங்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் (https://tnpcb.gov.in/contact.php) கொடுக்கப்பட்டுள்ளன. புகார்களை மின்னஞ்சல்/கடிதம்/தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பதிவுசெய்யலாம்.

புகார் அளிப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இது உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுப்பதை தடுக்க முடியும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவர்களின் பங்களிப்பிற்காக பாராட்டும் வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியத் தன்மை கண்டிப்பாக பராமரிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

Similar News