விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள்

விவசாய உற்பத்தியில் நானோ யூரியா 500 மி.லி தெளித்தாலே 45 கிலோ யூரியா பலன் தரும் என விவசாய தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குறிப்பிட்டார்.

Update: 2022-06-28 15:15 GMT

வயலில் நானோ யூரியா தெளிக்கும் விவசாயி.

நானோ யூரியாவை பயன்படுத்தி விவசாய உற்பத்தியில் பெருமளவு செலவை குறைக்குமாறு, விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்து,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற அரசு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நானோ யூரியா என்பது இலை வழியாக தெளித்திட உகந்த தழைச்சத்து உரமாகும். இதில் சாதாரண யூரியா குருணையை விட பல மடங்கு சத்து அதிகம் உள்ளது. அதை பல பல துகள்களாகச் சிறிது சிறிதாக நானோ துகள்களாகப் பிரிக்கும் போது அதிகச் தழைச்சத்தை அளிக்க வாய்ப்புள்ளது.

இதனை இலை வழியே தெளிக்கும் போது உடனடியாக பயிரின் பல பாகங்களுக்கும் எடுத்து செல்லப்படுவதால் விரைவில் பச்சை கட்டும் நன்மையும் நமக்கு கிடைக்கிறது. தன் தேவையை விட கூடுதலாக தழைச்சத்து உட்கிரகிக்கப்பட்டால் அதனை செல்லின் உட்புறம் உள்ள வேக்யோல் எனும் சில பகுதியில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் தருணம் எடுத்து பயன்படுத்த முடிகிறது. இதனால் உர விரயம் என்ற பேச்சே இல்லை.

முதல் மேலுரம் மற்றும் இரண்டாம் மேலுரம் யூரியாவிற்கு பதிலாக நானோ யூரியா 500 மிலி தெளித்தாலே 45 கிலோ யூரியா இட்டதன் பலனை அடையலாம். உரச்செலவில் சிக்கனம் மட்டுமல்ல,  நானோ யூரியாவின் சிறப்புகளில் சுற்றுப்புறச் சூழல் கேடு நேர்வதில்லை. அதிக களைகள் வளரவும் வழியில்லை. எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. மண் நீர்ப்பகுதிகளில் நஞ்சு கலக்க வழியே இல்லை. எனவே, சுற்றுப்புறச்சூழல் காக்கப்படுவது மட்டுமல்லாமல், பிற உயிரினப் பெருக்கம் மூலமாக உணவுச்சங்கிலி உடைபடுவதில்லை.

குறையில்லாமல் பயிர் வளரும். நன்மை செய்யும் உயிரினத்துக்கு சேதமில்லாத சூழல் நிலவும் அதனால், நானோ யூரியா நன்மைகள் பல தரும் உரமாக உள்ளதால் விவசாயிகள் அனைவரும் இதனை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரம் பெற அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags:    

Similar News