காஞ்சிபுரத்தில் திறப்பு விழாவிற்கு ஏங்கும் உடற்பயிற்சிக் கூடம்? ரூ. 25 லட்சம் விரயமாகும் அவலம்...

காஞ்சிபுரத்தில் ரூ. 25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்படாமல் காட்சியளிக்கிறது.

Update: 2023-01-25 15:23 GMT

காஞ்சிபுரத்தில் ரூ. 25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்படாமல் காட்சியளிக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் தங்களது உடலை பேணிக் காப்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். மூத்த குடிமக்களோ மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய இயலாத நிலையில் சிறிய அளவிலான பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியை காலை மற்றும் மாலை வேலைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவர்களோ தங்களது உடலை ஆரோக்கியமாகவும் கட்டுடலாக அமைத்துக் கொள்ள சிறுவயது முதலே யோகா மற்றும் விளையாட்டுகளில் கவனம் கொண்டு வருகின்றனர். இவர்களை தவிர்த்து பண வசதி படைத்தவர்கள் தனியார் நிறுவனங்கள் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் கொண்டு கட்டணம் செலுத்தி தங்கள் உடற்பயிற்சியை வல்லுநர்கள் கொண்டு வைத்து வடிவமைத்துக் கொள்கின்றனர்.

ஏழை, எளிய இளைஞர்களோ மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்களையும் அருகில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கருவிகள் மூலம் தங்கள் உடற்பயிற்சிகளை நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா கடந்த சில வருடங்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ஆய்வு செய்ய வந்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனிடம், நவீன வசதிகள் கூடிய உடற்பயிற்சி கூடம் அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் பூங்கா வளாகத்தில் சிறு பகுதியில் தனது சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2020 - 21 கீழ் ஒதுக்கீடு செய்து நவீன உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடம் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு நிறைவு பெற்றது.

அதற்கான கருவிகளும் வந்த நிலையிலும், அது அமைக்கப்பட்டதா? என்பது கூட தெரியாமல் அந்த உடற்பயிற்சி கூடம் இதுவரையிலும் திறக்கப்படாமல் உள்ளது. விரைவில் திறக்கப்படும் என ஆவலுடன் எதிர்பார்த்த இளைஞர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும் பூங்காவில் செல்லும் அனைவரும் இது காட்சி பொருளாகவே அமைந்து விட்டதாகவும் இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு யாரும் எடுத்து செல்லவில்லையா? என்ற கேள்வியுடன் நடை பயிற்சியை நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து வகைகளிலும் மாணவர்கள் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தனது நிதியின் கீழ் கட்டப்பட்ட கட்டிடம் திறக்கப்படாமல் காலம் தாழ்த்தி வருவதை தவிர்க்கும் வகையில் விரைவில் அதற்கான தீர்வை காண வேண்டும் என்பதே காஞ்சிபுரம் இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News