வீட்டுமனை தருவதாக கூறி பல கோடி மோசடி; எஸ்பி., அலுவலகத்தில் குவிந்த மக்கள்

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வீட்டுமனை தருவதாக கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி எஸ்பி., அலுவலகத்தில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-23 06:45 GMT

வீட்டு மனை தராமல் ஏமாற்றியதாக எஸ்பி., அலுவலகத்தில் குவிந்த மக்கள். 

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் மாட வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்.  காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் ஸ்ரீபிராபர்டி  என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.

காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செய்யாறு போன்ற பகுதிகளில் வீட்டு மனை பிரிவுகள் சுலபத் தவணையில் கிடைக்கும் என அறிவித்து ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களை இணைத்து அவர்களிடம் முறையே ரூ600, ரூ750 என கடந்த 2012 முதல் மாதாந்தோறும் வசூலித்துள்ளார். இதற்காக இவர் தனி ஏஜெண்டுகளையும் நியமித்து பண வசூலில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக பணம் செலுத்தியவர்களுக்கு வீட்டு மனை தராமல் ஸ்ரீதர் ஏமாற்றி வந்து்ள்ளார்.  அவரிடம் பலமுறை கேட்டும் எந்த பதிலும் வரவில்லை என தெரிந்து  பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

இதையறிந்து இதில் பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் பல லட்ச ரூபாய் அளித்துள்ளதாகவும் கண்ணீருடன் இதனால் தனது குடும்பத்தில் அதிக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அழுதுகொண்டே செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மோசடி மதிப்பு சுமார் பத்து கோடிக்கு மேல் இருக்கும் என தெரியவருகிறது.

Tags:    

Similar News