பொதுமக்களிடம் இருந்து 448 மனுக்களை பெற்ற ஆட்சியர் கலைச்செல்வி...!
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 448 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்கள்.
இதனை தொடர்ந்து, ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பழ மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் கந்தன், போஷன் அபியான் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.