பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் நாளை துவக்கம்

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை (திங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

Update: 2023-03-19 12:07 GMT

பண்ணாரி அம்மன் கோவில் (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை (திங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.  இங்கு கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நாளை (மார்ச்.20) திங்கட்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. வருகிற 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கம்பம் சாட்டப்படுகிறது. அன்று முதல் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகள் ஊர்வலமாக சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும். அப்போது அந்தந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தியும், அர்ச்சனை செய்தும் வழிபாடு நடத்துவார்கள்.

தொடர்ந்து, அடுத்த மாதம் ஏப்ரல் 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடக்கிறது. 5-ம் தேதி கோவிலில் திருவிளக்கு பூஜையும், 6-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ம் தேதி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 10-ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. குண்டம் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

Tags:    

Similar News