உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த எம்எல்ஏ
பெரியசெட்டிபாளையத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஈரோடு பெரியசெட்டிபாளையத்தில் உள்ள ஈஷா நர்சரி மையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடந்தது.
இதில், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதுபற்றி ஈஷா மைய தன்னார்வ தொண்டர்கள் கூறியதாவது, காவேரி கூக்குரல் சார்பில் இந்த ஆண்டு ஒரு கோடியே ஒரு லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மரங்கள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான பணிகளை ஈஷா செய்து வருகிறது.
காவேரி நதிக்கு புத்துயிர் ஊட்டவும் அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சத்குரு கடந்த 2019 ஆம் ஆண்டு காவிரி கூக்குரல் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதுவரை 4 கோடியே 4 லட்சம் மரங்கள் விவசாயிகள் நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது. மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வது எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்னென்ன ஊடுபயிர்கள் செய்யலாம் என்பது போன்ற விவசாயம் சார்ந்த ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று இலவசமாக ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் அனைத்து ஈஷா நாற்றுப்பண்டுகளிலும் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் 3 ரூபாய்க்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிகழ்ச்சியில் ஒளிரும் எதிர் காலம் அறக்கட்டளை சந்துரு மற்றும் ஈஷா தன்னார்வ தொண்டர்கள் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.