ஈரோட்டில் ஆண் குழந்தை பெற்ற சிறுமி பலி; கணவர் மீது போக்சோ வழக்கு

ஈரோட்டில் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஆண் குழந்தை பெற்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-12-05 12:45 GMT

மொடக்குறிச்சி காவல் நிலையம் பைல் படம்

ஈரோடு அருகே ஆண் குழந்தை பெற்ற சிறுமி மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்ற போது விபத்துக்குள்ளாகி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து கணவர் மற்றும் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் எத்தனையோ மூட நம்பிக்கைக்காக பெண்கள் கடைப்பிடித்து வந்த சாஸ்திர, சம்பிரதாயங்கள் அழிக்கப்பட்ட நிலையில், இன்றும் கூட பல இடங்களில் தொடர்ந்து அது போன்ற சம்பவங்கள் நடைபெறத் தான் செய்கின்றன. அதிலும் இந்த குழந்தை திருமணமும், அதன்மூலம் பாதிக்கப்படும் சிறுமிகளின் வாழ்வு கேள்விக்குறியாவதும் தொடர்கதையாகி வருகிறது.அதிலும் 20-வது நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் இந்த குழந்தை திருமணம் நடைபெறுவது வருத்தத்திற்குரியதாக உள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் பல கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெற்றதை செய்திகள் வாயிலாக நாம் தெரிந்து கொண்டோம். அந்த வரிசையில், ஈரோட்டிலும் ஒரு சம்பவம் அரங்கேறி குழந்தை பிறந்து அந்த சிறுமி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 25). இவர். மொடக்குறிச்சியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்னை கடந்த ஏப்ரல் மாதம் கடத்தி சென்று, சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர், கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்து, ஈரோடு நாடார்மேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்தார். கடந்த மாதம் 24ம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது சிறுமிக்கு ஜன்னி ஏற்பட்டு, பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நிலை மேலும் மோசமானதால் சிறுமியை மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு பெருந்துறை சாலையில் மேட்டுக்கடை அருகே சாலையை கடக்க முயன்றபோது, சாலையின் நடுவே இருந்த ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி சிறுமி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஈரோடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன், மொடக்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில், கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஆம்புலன்சை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்தி சிறுமி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக டிரைவர் சரத் மீது ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

Tags:    

Similar News