வள்ளலார் நினைவு தினத்தில் பவானியில் களைகட்டிய மது விற்பனை : 500 மதுபாட்டில் பறிமுதல்!
பவானியில், வள்ளலார் நினைவு தினமான நேற்று சந்து கடையில் மதுவிற்பனை களைகட்டியது. எஸ்.பி., உத்தரவால் விழித்துக்கொண்ட போலீசார் சோதனை நடத்தி ஆறு பேரை கைது செய்து, 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.;
ஈரோடு : பவானியில், வள்ளலார் நினைவு தினமான நேற்று சந்து கடையில் மதுவிற்பனை களைகட்டியது. எஸ்.பி., உத்தரவால் விழித்துக்கொண்ட போலீசார், சோதனை நடத்தி ஆறு பேரை கைது செய்து, 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வள்ளலார் நினைவுதினத்தையொட்டி, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சந்துக்கடைகளில் மது விற்பனை நடப்பதாக வந்த தகவலால், பவானியில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர்.
பவானி, குருப்பநாய்க்கன்பாளையத்தில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த பாலசந்திரன் (37) , செல்வராஜ் (53) ஆகியோரை கைது செய்து 200 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மைலம்பாடி வாரச்சந்தை அருகே மது விற்ற, சங்கரகவுண்டன்பாளையம் சிங்காரவேல் (42) , நல்லிபாளையம் சதீஷ் (42) , ஆகியோரை கைது செய்து 200 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டது.
பவானி, நேதாஜி நகரில் மது விற்ற குருப்பநாயக்கன்பாளையம் மூர்த்தி (35) , நேதாஜி நகர் சேகரை கைது செய்து, 104 மது பாட்டில்களை கைப்பற்றினர்.