கோவில்களில் கேதார கவுரியம்மன் விரதம்: பெண்கள் சிறப்பு வழிபாடு

தர்மபுரியில், தீபாவளி பண்டிகையையொட்டி, கோவில்களில் கேதார கவுரியம்மன் விரதம் இருந்து, பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Update: 2021-11-05 13:15 GMT

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில்,  கேதார கவுரியம்மன் விரத சிறப்பு வழிபாட்டில் பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அமாவாசை தினத்தில்,  குடும்ப நன்மை மற்றும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று பெண்கள் கேதார கவுரியம்மன் விரதமிருந்து வழிபடுவது வழக்கம். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும்,  கேதார கவுரியம்மன் விரதத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில்,  கேதார கவுரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனையும், அலங்கார சேவையும் நடைபெற்றது. இதில் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது பெண்கள் ஒரு தட்டில் 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், அதிரசம், மஞ்சள் கொம்பு ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், நெசவாளர் நகர் பாலமுருகன் கோவில், மற்றும் மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணியன் சுவாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் மற்றும் அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், எஸ்.வி. ரோடு சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் கேதார கவுரியம்மன் விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கோயில்களில் கேதார கவுரியம்மன் விரத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News