நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காவிரியில் 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி சற்று சரிந்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Update: 2023-08-13 11:51 GMT

ஒகேனக்கல் அருவி  கோப்புப்படம் 

கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவ மழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடையும். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

தற்போது பருவமழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு தண்ணீரின் அளவும் குறைந்ததாலும், தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து சற்று சரிந்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இன்று விடுமுறை நாள் என்பதால் தர்மபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர். இதன் காரணமாக பரிசல் நிலையம், மீன் கடைகள், கடைவீதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும், எண்ணை மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். வழக்கமாக ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை பருவ மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்து அதில் இருந்து உபரி நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் பாறைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும், இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு கரையோர மக்கள் வெளியேற்றபடுவார்கள். மேலும், குளிக்கவும், பரிசல் செல்லவும் சுற்றலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்.

தற்போது பருவமழை சரிவர பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த அளவே வந்து கொண்டிருக்கிறது.

வழக்கத்திற்கு மாறாக இந்த மாதத்தில் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் குறைவான அளவில் தண்ணீர் செல்வதால் இன்று சுற்றுலா பயணிகள் தடை ஏதுமில்லாமல் மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் குளித்தும், பரிசலில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்

Tags:    

Similar News