அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு

தீவிபத்தில் காயமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-01-25 05:36 GMT

கணவர் குழந்தைகளுடன் கேபி அன்பழகன் மருமகள் பூர்ணிமா

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோடஹள்ளி பகுதியைச் சேர்ந்தவரும் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.பி அன்பழகனங இளைய மகன் சசி மோகன். இவரது மனைவி பூர்ணிமா (30).

கடந்த 18ம் தேதி தர்மபுரி பாலக்கோடு கெரகோடஹள்ளியில் உள்ள தனது வீட்டில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கிய நிலையில் கீழே விழுந்த போது அங்கு எரிந்துகொண்டிருந்த தீப விளக்கில் பூர்ணிமாவின் ஆடையில் தீப்பிடித்தது. இந்த தீ உடல் முழுவதும் பரவி பூர்ணிமான பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து சுமார் 80% தீ காயங்களுடன் பூர்ணிமாவை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து பூர்ணிமா இறப்பு குறித்த மருத்துவமனையின் அறிக்கை காரிமங்கலம் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இறப்பு சம்பவம் தொடர்பான விவரங்களை காரிமங்கலம் காவல்துறையினர் மருத்துவமனை மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழங்கிய பிறகு உடல்கூறாய்வு பரிசோதனை தொடங்கும். உடல்கூறாய்வு சோதனையானது வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தர்மபுரி பாலக்கோடு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருமகள் உயிரிழந்தது கே.பி.அன்பழகன் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News