3.84 லட்சம் விதை பந்துகளை உருவாக்கி தனியார் கல்லூரி மாணவிகள் சாதனை

2000 மாணவிகள் சேர்ந்து தயாரித்த 3.84 லட்சம் விதை பந்துகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Update: 2023-11-05 07:48 GMT

விதைப்பந்துகள் தயாரித்து சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகிகள் பாராட்டியபோது 

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23.69 சதவீதம் வனப்பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை 33 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 10 ஆண்டுகளில் 12 ஆயிரம் சதுர கிலோமீட்டர் வனப்பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தர்மபுரியில் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் மூலம் 3.84 லட்சம் விதைப் பந்துகள் தயார் செய்தனர். இதன் மூலம் காடுகளின் பரப்பை அதிகரிக்கவும், தயாரிக்கப்பட்ட விதை பந்துகள் மூலம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்த சந்திரயான்-3 விண்கலத்தின் ஓவியத்தை வரைந்து, உலக சாதனை பட்டியலில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அரசின் பசுமை தமிழக இயக்கத்திற்கு வனத்துறை மூலம் வழங்க திட்டமிட்டனர்.

கடந்த 2 நாட்களில் கல்லூரி மாணவ மாணவிகள் 3.84 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி, சந்திரன்-3 ஓவியம் வரைந்தனர். இது விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்துகின்ற வகையில் அமைக்கப் பட்டது.

மேலும் உலக சாதனை பட்டியலில் 2000 மாணவிகள் ஒன்றிணைந்து 3.84 இலட்சம் விதை பந்துகள் தயாரித்து, 182.5 சதுர மீட்டரில் 13.5 மீட்டர் உயரம், அகலம் கொண்ட மிகப்பெரிய ஓவியத்தினை வரைந்தது உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது. அதனை எலைட் உலக சாதனை அமைப்பினர் நேரில் வந்து ஆய்வு செய்து, இந்த மாணவிகளின் முயற்சியை பாராட்டி உலக சாதனை படைத்ததாக அறிவித்தனர்.

மேலும் இந்த உலக சாதனை படைத்த தற்காக கல்லூரி தாளாளர் பச்சமுத்து பாஸ்கரிடம் அதற்கான சான்றிதழ்கள், பதக்கம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து பசுமை தாயகம் இயக்கத்திற்கு, தர்மபுரி வனத்துறை அலுவலரிடம் தாங்கள் உருவாக்கிய 3.84 லட்சம் விதை பந்துகளை கல்லூரி மாணவிகள் ஒப்படைத்தனர். இந்த விதைப் பந்துகளில் அரசன், புங்கன், புளியமரம், வேம்பு, ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான விதைகளை வைத்து தயாரித்தனர். இந்த விதை பந்துகள் தர்மபுரி, திருச்சி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த விதை பந்துகளை உருவாக்கி சாதனை படைத்த மாணவ, மாணவிகள் தங்கள் முயற்சி சாதனை படைத்தது என்றவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஆரவாரத்துடன் கைதட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News