தர்மபுரியில் ரயில்வே கேட் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரியில் பிடமனேரி- வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் இடையே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-10-28 01:22 GMT

குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலை 

தர்மபுரியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண பிடமனேரி- வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் இடையே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தர்மபுரி ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. தர்மபுரி பிடமனேரி- வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட சுமார் 2 கி.மீ நீளம் கொண்ட இந்த தார்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலை 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் இந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்- பிடமனேரி இணைப்பு சாலை சீரமைக்கப்படாததால் தர்மபுரி ரயில் நிலைய சாலை, நேதாஜி பைபாஸ் சாலை ஆகியவற்றில் வாகன போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெண்ணாம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை மாலை நேரங்களில் தர்மபுரி நகரப் பகுதிக்கு வருவோரும், தர்மபுரி நகரப் பகுதியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வோரும் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறார்கள்.

காலை நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள், அலுவலகப் பணிகளுக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல இயலாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதேபோல் தர்மபுரி ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் சரக்கு ரயில்களில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்ல வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதிக்கு வரும் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்த இணைப்பு சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி நகரில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு உரிய மாற்று சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பது முக்கிய காரணம். குறிப்பாக பிடமனேரி முதல் வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் வரை உள்ள இணைப்பு சாலை சீரமைக்கப்பட்டால் இந்த சாலையை தர்மபுரி நகரப் பகுதிக்கு வந்து செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். இதனால் தர்மபுரி- சேலம் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும். விபத்துகளும் குறையும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags:    

Similar News