தர்மபுரி அருகே ரயில் பாதையில் நிலச்சரிவை தடுக்க முத்தம்பட்டி மலைக்கு கம்பி வலை

தொப்பூர் அடுத்த முத்தம்பட்டி ரயில் பாதையில் நிலச்சரிவை தடுக்க மலைக்கு கம்பி வலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2021-12-08 06:00 GMT

முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே பாறைகள் விழாமல் இருக்க மலைகளுக்கு கம்பி வலை அடிக்கப்பட்டு வருகிறது

முத்தம்பட்டி ரயில் பாதையில், நிலச்சரிவை தடுக்க, மலைக்கு கம்பி வலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த முத்தம்பட்டி மலைப்பாதையிலுள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த மாதம், 12ந்தேதி அதிகாலை, 4 மணியளவில் கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து, கர்நாடக மாநிலம் யஸ்வந்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது.

அப்போது மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். மீண்டும், 14ந்தேதி நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதையடுத்து முத்தம்பட்டி மலைப்பாதையில், தண்டவாளத்தில் பாறைகள் விழுவதை தடுக்க, பெங்களூரு கோட்ட ரயில்வே நிர்வாகத்தினர் கடந்த, 13 நாட்களாக, மலைக்கு கம்பிவலை அமைத்து வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அலுவலர்கள் கூறுகையில், 'பயணிகளின் நலன் கருதி, நிலச்சரிவு ஏற்படும் பகுதியில், 80 மீட்டர் உயரமுள்ள மலையிலிருந்து, தண்டவாளத்தில் பாறைகள் விழுவதை தடுக்க கடந்த, 13 நாட்களாக மலைக்கு கம்பி வலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சில நாட்களில் இப்பணி முடிந்து விடும். இதையடுத்து, மலையிலிருந்து பாறைகள் தண்டவாளத்தில் விழுவது முற்றிலும் தடுக்கப்படும்' என்றனர்.

Tags:    

Similar News