படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர்

படித்த, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-10 07:00 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி

இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு,  உதவிதொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம் ஒன்றுக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-ம், 10 ம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம், மேல்நிலைக்கல்வி (12-ஆம் வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600/-ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 30.09.2021 உடன் முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றது.

மேற்கண்ட கல்வித் தகுதியினை,  வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து,  ஒரு வருடம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். SC / ST பிரிவினருக்கு 30.09.2021 அன்று, 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000/-க்கு மிகையாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை.

விண்ணப்பதாரர் பள்ளி / கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம் கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள். இவ்வுதவித்தொகை பெற,  முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 30.11.2021 வரை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று,  மூன்றாண்டு காலம் நிறைவு பெறாமல், 2021-2022ம் நிதியாண்டிற்கு சுய உறுதி ஆவணம் அளிக்காதவர்கள், 30.11.2021-க்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து,  தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு,  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News