தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம்

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-01-25 07:00 GMT

தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் மாபெரும் போராட்டம் ஆகும். அந்தப் போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு தர்மபுரி மாவட்ட மாணவர் அணி சார்பில் நடைபெறும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தர்மபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உயர்க்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ  தலைமையில் தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னா் உயிா்நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் தொ.மு.நாகராஜன் அரூா் சட்டமன்ற உறுப்பினா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோன்று திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி பெரியார் சிலை அருகே அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News