தர்மபுரியில் டிசம்பர் 23ம் தேதி முதல் 4 நாட்கள் புத்தகத் திருவிழா

தர்மபுரியில் டிசம்பர் 23-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

Update: 2021-12-20 05:00 GMT

தகடூர் புத்தக பேரவை செயலாளர் முன்னாள் எம்.பி., டாக்டர் செந்தில் பேசுகிறார்.

தர்மபுரியில் தகடூர் புத்தகப்பேரவை நிர்வாகிகள் கூட்டம் அப்பேரவையின் தலைவர் சிசுபாலன் தலைமையில்  நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். செயலாளர் முன்னாள் எம்.பி டாக்டர்.செந்தில் சிறப்புரையாற்றினார்.

கடந்த 2019 - ஆம் நடைபெற்ற தருமபுரி புத்தகத்திருவிழா கொரோணா பெருந்தொற்று காரணமாக நடத்த இயலாது சூழ் நிலை ஏற்பட்டது. பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் தருமபுரி, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட இடங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

இந்த ஆண்டு வருகிற டிசம்பர் மாதம் 23 -ம் தேதி முதல் நான்கு நாட்கள் புத்தகத்திருவிழா தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செந்தில் கூறுகையில், 2019 ஆம் ஆண்டு தகடூர் புத்தகம் பேரவை சார்பில் தர்மபுரியில் புத்தகத்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கடைகள் இடம் பெற்றன. முன்னணி பதிப்பகங்களின் ஏராளமான புத்தகங்கள் அரங்குகளில் விற்பனையானது. பின்தங்கிய பகுதி என்று கூறப்பட்ட தர்மபுரியின் முகத்தை மாற்றும் வகையில் புத்தகத்திருவிழா அமைந்தது. பத்து நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் ஏராளமான புத்தகங்கள் விற்பனையானது.

கலை, இலக்கியம் வரலாறு, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆளுமைகள் கலந்து கொண்ட கருத்தரங்கம், கவியரங்கம்,நூல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தினசரி நடைபெற்றது.

இந்த ஆண்டு புத்தகத்திருவிழா கொரோணா தடுப்பு வழிகாட்டுதல்கள் படி நடைபெறுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி துவக்கி வைக்கிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார்.

20,000 தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வருகிறது. ஐந்து பதிப்பகங்கள் பத்து அரங்குகள் இடம் பெற்றுள்ளன. நான்கு நாட்களும் மாலையில் கருத்தரங்கம், நூல் வெளியீடு உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. 23-ம் தேதி ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு, 24-ம் தேதி ஊடகவியலாளர் சித்ரா பாலசுப்பிரமணியன், 25-ஆம் தேதி தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன், 26-ஆம் தேதி எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான பவா செல்லதுரை ஆகியோர் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அனைவரும் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு நூல்களை வாங்கி பயன் பெற வேண்டும் என்று டாக்டர் செந்தில் எம்.பி கூறினார்.

நிர்வாகிகள் கார்த்திகேயன், பழனி, சுப்பிரமணியன், அறிவுடைநம்பி, சௌந்திரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News